கவிதைச் சொல் எப்படி வேண்டும் ?
நெஞ்சை மென் இறகென வருட வேண்டும் -
சொல்லில் சிறு போதை வேண்டும்
விழியோரம் நீர் தேக்க வேண்டும்
மாசு சற்றேனும் கரைய வேண்டும்
என்னில் பரிவு படர வேண்டும்
மனம் பரந்து விரிய வேண்டும்
காதல் துளிர்க்க வேண்டும்
பெண்மை போற்றிட வேண்டும்
தாய்மை தருவது வேண்டும்
இயற்கை இதம் வேண்டும்
படைப்பின் வியப்பு வேண்டும்
பொய்மை இலாதது வேண்டும்
உணர்வின் எதிரொளி வேண்டும்
குழந்தையின் நடை ஒலி வேண்டும்
மழலையின் குழைவுகள் வேண்டும்
வசந்தத்தின் வண்ணங்கள் வேண்டும்
நறுமண எண்ணங்கள் வேண்டும்
இறக்கைகள் படைக்க வேண்டும்
என்னை விண்ணுள் உயர்த்த வேண்டும்
என்னை மானுடனாய் மாற்ற வேண்டும்
இவையே கவிதையில் என்றும் காண வேண்டும் !
-----சந்திர கலாதர்

No comments:
Post a Comment