Thursday, February 16, 2012

ஒவ்வொரு காலையும்
&
ஒவ்வொரு காலையும்
புத்தனாய்ப் பிறக்கிறேன் ;
தெளிந்த  சிந்தனைகள் 
ஸ்படிக நீரோட்டமாய் -
கவலையின் மூலங்கள்
தெள்ளத் தெளிவாய் -   
வாழ்வின் நிலவொளி 
கிட்டும் தொலைவில்-
எனக்குள் என்னைச்
சரியாய்ப் பார்க்கிறேன் -
எதற்குமே ஓர் வேராய்
என்னையும் காண்கிறேன் -
பிறரது நல்லவை
காலைக் கதிராய்-
என் நச்சை நசுக்கி 
தூயவை ஏற்கிறேன் -
இனி இன்பமே வாழ்வில் 
மௌனமாய் மகிழ்கிறேன் !
&
நொடிகளின் விரைவில் 
நிகழ்வின் உராய்வில்
அவசர அறிவில் 
கோப வெம்மையில்
இன்னா சொற்கள்
வெடித்து எரிகிறேன் -
எல்லோரும் எதிராய்ச் 
ஏன் இச்சதிகளில் ?-
மனம் வெம்பியே
நைந்து சாகிறேன் -
எங்கும் இருளாய்
முட்டித் தவிக்கிறேன்-
எனது புத்தன் 
எங்கே செத்தான்?
எப்படி என்னுள் 
இத்தனை பேய்கள் 
தலை விரிகோலமாய் 
என்னைச் சிதைத்து 
என் உயிர் குடிக்க ?
&
நாளை மறுபடி 
நல்லவன் ஆவேன் என 
இழுத்துச் செல்லும் 
இரவிடம் சொன்னேன் -
மெல்ல ஓர் முறுவல் 
அது பூத்திடக் கண்டேன் !
 
-----சந்திர கலாதர்
 
 

No comments:

Post a Comment