ஒவ்வொரு காலையும்
&
ஒவ்வொரு காலையும்
புத்தனாய்ப் பிறக்கிறேன் ;
தெளிந்த சிந்தனைகள்
ஸ்படிக நீரோட்டமாய் -
கவலையின் மூலங்கள்
தெள்ளத் தெளிவாய் -
வாழ்வின் நிலவொளி
கிட்டும் தொலைவில்-
எனக்குள் என்னைச்
சரியாய்ப் பார்க்கிறேன் -
எதற்குமே ஓர் வேராய்
என்னையும் காண்கிறேன் -
பிறரது நல்லவை
காலைக் கதிராய்-
என் நச்சை நசுக்கி
தூயவை ஏற்கிறேன் -
இனி இன்பமே வாழ்வில்
மௌனமாய் மகிழ்கிறேன் !
&
நொடிகளின் விரைவில்
நிகழ்வின் உராய்வில்
அவசர அறிவில்
கோப வெம்மையில்
இன்னா சொற்கள்
வெடித்து எரிகிறேன் -
எல்லோரும் எதிராய்ச்
ஏன் இச்சதிகளில் ?-
மனம் வெம்பியே
நைந்து சாகிறேன் -
எங்கும் இருளாய்
முட்டித் தவிக்கிறேன்-
எனது புத்தன்
எங்கே செத்தான்?
எப்படி என்னுள்
இத்தனை பேய்கள்
தலை விரிகோலமாய்
என்னைச் சிதைத்து
என் உயிர் குடிக்க ?
&
நாளை மறுபடி
நல்லவன் ஆவேன் என
இழுத்துச் செல்லும்
இரவிடம் சொன்னேன் -
மெல்ல ஓர் முறுவல்
அது பூத்திடக் கண்டேன் !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment