20.02 2012 / காலை 06.30 மணி /திங்கள்
சென்னையில் பனிமூட்டம் .
வானில் இருந்து இறங்கிய பெரும் திரை .
அழகாய்,அற்புதமாய் ,விருந்தாய் ,மகோன்னதமாய்,
கவிதையாய் ,குளிர்வாய் ,உல்லாசமாய் ...
எப்படிச் சொல்வேன் --
மொட்டைமாடிக்கு நாலுகாற் பாய்ச்சலில் பாய்கிறேன் ..
அங்கே இதோ -
&
மேகம் ஒன்று இன்று
என்னைக் கட்டி அணைக்குதே !
மேனி எங்கும் நனைந்திடவே
ஈர முத்தம் பொழியுதே !
குளிரக் குளிரப் பேசிப்பேசி
மெய் சிலிர்க்க வைக்குதே !
மலரினும் மெலிதான
பொடி மழை தூவுதே!
பெரும் மேகம் ஒன்று
திசை இழந்து தடுமாறி
மண் இறங்கி மயங்குதோ ?
மீள வழி புரியாது
அலைந்து திரியுதோ ?
விரட்டி விரட்டி வாடைக் காற்று
மேகம் துரத்துதோ ?
சிறு குழந்தைகள்போல்
ஓடி விளையாடுதோ ?
கிழக்கில் எங்கோ
குளிர்த் தீப் பிடித்து
இப்புகை மூட்டமோ ?
பார்வையை விழுங்கிவிட்டு
வெண்போர்வை போர்த்துதோ ?
கீழ்வானம் பழுக்காத
மர்மம் என்னவோ ?
சூரியனின் வெற்றிக்கொடி
பறக்கவில்லையே ?
பொன்னம்புகள் வானெங்கும்
சீறவில்லையே ?
அரிதான தோற்றம் கண்டேன் -
இயற்கைக்கு ஓர் கோடி
நன்றி சொல்கிறேன் !
---சந்திர கலாதர்

No comments:
Post a Comment