தம்பூர் மீட்டியபடியே அழகாக ...
&
அவள் தம்பூர் மீட்டியபடியே
அழகாகப் பாடுகிறாள் -
தம்பூரின் நான்கு தந்திகளில்
அவள் இரு விரல்கள்
ஒரே நடையில் ஒரே திசையில்
படிகள் இறங்குவதுபோல்
மீண்டும் மீண்டும் வருடுகின்றன -
தம்பூர் நின்றபடியே சாய்ந்து
அவள் மீது மயங்கிக் கிடக்கிறது-
அது பேசாது பேசுகிறதோ ?
அவள் மனதோடு இழைகிறதோ ?
மெலிதாக அவளுக்கு மட்டுமேவா?
அவளின் அன்பான வருடலில்
தம்பூரே ,தூங்கிக் கனவுகிறாயா ?
சுற்றிய இசைக் கருவிகள்
நாதங்கள் குதித்திட
நீ மட்டும் கேளாத அடிநாதத்தில் -
அவளது உயிரின் மூச்சாகவா ?
நாதத்தின் உயிராகவா ?
அவள் இசை உன்னில் சாய்ந்து கொள்கிறதா ?
அல்லது நீ அவள் அமுதம் அமிழ்கிறாயா ?
ஓம் எனும் ஆதார ஸ்ருதியாகவோ ?
'ம்ம்' எனும் லயிப்பின் இமை இறக்கமோ ?
&
அது என்ன இசை வடிவம் ?
கர்நாடகமா? ஹிந்துஸ்தானியா ?
பாடுபொருள் தான் என்ன?
எதுவாயினும் அது மெல்லியது ;
இழைவது ; நெஞ்சோடு நெகிழ்வது ;
கை கோர்த்து அழைத்துச் செல்வது ;
மொழி கடந்து மொழிவது ;
புரியாது புரிவது;தெரியாதே ஒன்றுவது -
அதுதானே அவள் இசையின் மகிமை -
அவள் மெதுவாய் இங்கும் அங்குமாய்
பாடியபடி அசைகிறாள்-
அவள் இசையும் மகுடி நாகமாய்
அவள் விழி ஒன்றி இணை அசைவில் -
விரல்களை விரித்து
மெல்லக் கை உயர்த்துகிறாள் ;
ராகமும் மெலிதாகப் பறக்கிறது -
ஒரு இளம் தாய் தன் மழலையை
முத்தமிட்டுக் கொஞ்சுவதாய்
செல்லமாய்க் கெஞ்சுவதாய்
பின்னே ஆதரவாய்த் தொடர்வதாய்
ஓடிப் பிடிப்பதாய்
நெஞ்சாரக் கட்டிப் பிடிப்பதாய்
உச்சி முகர்வதாய்
பொய்க்கோபம் கொள்வதாய்--
சிலர் போல் முக வலிப்புகள்
வக்கிர உடல் அசைவுகள் அற்றதாய்
உருட்டல் புரட்டல்களில்
மொழி பொருள் காயங்கள் இல்லாததாய்
பூர்ணிமைப் பால் விரிவாய் -
ஆம், அவள் இசையை
தலை அசைவுகளால் எழுதுகிறேன்
நெடும் உள்மூச்சுக்களால்
கவிதை தைக்கிறேன்
மனநிறைவாய் வெண்புறவாய்
காற்றில் மிதக்கிறேன்.
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment