கங்கைக் கன்னியே !
கதிரோனின் பொன் அடுப்பில்
இமய வெள்ளியின் உருகலாய்
களங்கமில் ஸ்படிக ரூபியாய்
மலைகளின் பளிங்கு மாலையாய்
'கலகல'ச் சிரிப்புடன்
தவழ்ந்தும் தாவியும்
உயரங்கள் குதித்து
சமவெளி தாழ்ந்தாய் --
புனிதமான நீ
மனிதனைப் பார்த்தாய் -
பசுமையாய்ப் பார்த்தாய்
புராணத்தில் புழுங்கிய அவனோ
பொய் பொதிந்திடப் பார்த்தனன் -
போற்றுவதாய் ஆராதனை காட்டி
மயானத்தில் உன்னைக் கரைத்தான்-
காசியில் உன்னைக் களங்கம் ஆக்கினான் -
அவன் பொய்மையும் பிடுங்கலும்
சுடுகாட்டினும் நாறின-
சாவின் நடனமும்
மரணத் தீயும்
அழுகிய உடல்களும்
அரைகுறை வேகலும்
உன் தொண்டையுள் செருகின-
மூச்சுத் திணறினாய்-
மனிதக் கழிவும் மரணச் சாம்பலும்
உன் ஆடையை அவிழ்த்து
அலங்கோலம் செய்தன-
வழியெலாம் நீ அழுதிடும் கூக்குரல்
ரத்த கங்கையாய் நெஞ்சைச் சிவக்குதே-
வங்கக் கடல் புலம்புகை எல்லாம்
மரணித்து மடியுள் வீழ்ந்த
அப்புனித கங்கைக்காக
மார்பில் அடித்தழும் ஓலங்கள் தானோ ?
ஒரு நதியைக் கொன்று
ஒரு சுவர்க்கம் தேடும் மூட மானுடா!
அங்கே பார் ! பகீரதன் மறுபடி
மாற்றுக்காலில் தவம் இருப்பதை -
மறுபடி கங்கையை வானுள் செலுத்த !
----சந்திர கலாதர்

No comments:
Post a Comment