எல்லா நிகழ்வுகளும் நாம் அறிந்தவைதான் ;
எல்லாமே நாம் உணர்பவைதான் ;
எல்லாமே நமக்குள் மௌனமாய் சமைக்கப்படுவனதான்--
இருப்பினும் அவை சொல்லப்படுகின்றன ..கேட்கப் படுகின்றன..
எழுதப்படுகின்றன..விவாதிக்கப்படுகின்றன --
உணர்வுகள் எல்லோரும் அறிந்தவை ஆயினும் ,
அந்த உணர்வுகள் இயல்பானவை ,சாதாரணமானவை ஆயினும்
எழுதுவதில் என்ன தவறு?
அவை எப்படி உணரப்பட்டன ?
எத்தகு சுவைபட எழுதப்படுகின்றன என்பதே முக்கியம் .
எனவேதான் சாதாரணமான எண்ணங்களில்
நான் பயணித்தவாறு எழுதப் போகிறேன்--
கவிதைகள்தான் எப்போதும் எழுதப்படவேண்டும் என்பதில்லை !
தன்னுள் பார்த்துச் சிந்திக்கும் அதே மனிதன் வேறு கோணங்களில்
மற்றவர்களைப் பார்த்தும் சிந்திக்கிறான்--
தன் வேடம் உரித்தவன் பிறர் வேடங்களுள் ஊடுருவுகிறான் ;
இங்கு "நான் " என்பது எல்லோரையும் குறிக்கும் ;
" நீங்கள்" என்பது சுற்றியுள்ள காரியவாதிகளை,
ஏமாற்றுப் பேர்வழிகளைக் குறிக்கும் .
உலக நடப்புகளை எண்ணி ...
பதவி ,புகழ் மொய்த்த காலத்தில்
சாக்கடை ஈக்களாய் தன்னை மொய்த்த சூழல் --
அவை அற்று அல்லது இற்ற நிலையில் எப்படி ஒதுக்கித் தள்ளப் போகிறது
என்பதை அனுபவ வாயிலாக அனுதினமும் அறிந்த உள்ளம் ,தன்னைத்
தனிப்படுத்தி ,தனக்கு வெளியே நின்று
தன்னைப் பார்ப்பதும் ,காரியவாதிகளைப் பார்ப்பதும் தவறல்லவே !
இது உள்ளத்தின் பிதற்றல்கள்தானே --
எனவே இவற்றிற்கு --
பூத்திடும் பிதற்றல்கள்
நான் சிரிக்கிறேன் --
எரிவாயு அடுப்புபோல் ..
மௌனமாய்...அழகாய் ...நீலமாய்
உதடுகளில் புஷ்பிக்கிறேன் --
ஒன்றும் அறியாத சிரிப்பல்ல இது --
ஏமாந்ததோ ..ஏமாற்றுவதோ ஆன
சிரிப்பல்ல இது --
உஷ்ணமாய் விஷயம் அறிந்த
விழ நெளிவான சிரிப்புதான் --
வாழ்வின் நடப்புகளை
வேகவைத்துக் கொண்டிருக்கும் சிரிப்பு !
&&
நீங்கள் மிகையாகப் பாராட்டிப் பொங்கி
முகப் பாண்டங்களில் வழிகிறீர்கள் --
மௌனமாய் என்னைக் காத்துக் கொள்கிறேன் --
உங்களை இறங்கிவிடக்
குரல் கொடுக்கிறேன் -
நீங்களே என்னில் வீழ்ந்து
கருகித் தீய்ந்துவிடலாகாது அல்லவா !
அல்லது ...நானே உங்கள் சுடு வெள்ளத்தில்
அணைந்துவிடலாகாது அல்லவா ?
&&
உங்கள் பொங்குதலின் உந்துதலின்...
காரிய வாதங்களின் கொக்கரிப்புகளை
ஒன்றும் நான் அறியாதவன் அல்லவே !
நீங்களும் ஏமாறவில்லை -
நானும் ஏமாறுவது இல்லை !
இரண்டுமே இருவருக்குமே
நன்றாகத் தெரியுமே !
என்ன சுகம் இந்த ஒருவரை ஒருவர்
ஏமாற்றுவதாய்ப் பாசாங்கு பாவனைகளில் !
கை கொடுத்துக் கொண்டே
கத்தி செருகுவதாய் ...
சிரிக்கும் பற்களிடைப் பசி வேகம் தெரிவதாய் .! nnnnnn
&&
என் முன் நின்று என் இருக்கைகளுக்கு
வான விற்கள் ஆவதை விட்டு விட்டு --
நான் வீசும் நாணய விளிம்புகளில்
தடுமாறி ஆடுவதை ஒழித்துவிட்டு --
விழிகளில் வியாபாரங்களை வரையாமல்
என்று என்னுள் வாழும் அந்த மனிதனை மட்டும்
பார்க்கப் போகிறீர்கள் ?
என்று அவனோடு கைகோர்த்து வரப் போகிறீர்கள் ?
அந்த மனிதனை எங்கோ தொலைத்துவிட்டு
அவன் பூத நிழலோடு கைகுலுக்க
ஏன் இப்படிப் போட்டியிடுகிறீர்கள் ?
[ 04.12.1991 ]
No comments:
Post a Comment