நக்ஷத்திரமாய்ப் பதவியிலோ ,பணத்திலோ,திரையிலோ அரசியலிலோ
'டால்' அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் ஒரு நிமிடம் பாராட்டு
மழைச் சொரிவில் 'சிந்தனை'க்குடை விரித்துத் தன்னை நனையாது
பார்த்துக்கொள்ள விழைகிறான் --
அவனுக்குத் தெரியும் அவனையே பார்த்துக் கொள்ள ..!
அவனுக்குத் தெரியும் தன் முகங்கள் எத்தனை ?
தன் நாவுகள் எத்தனை ? தன் பயணங்கள் எத்தனை ?.என்பன எல்லாம் --
இது எல்லோர்க்கும் இயற்கைதானே ?
சர்வ சாதாரண நிகழ்ச்சி தானே ?
இதை ஏன் எழுத வேண்டும் ?--சிலர் கேள்வி இது .
இதற்குப் பின்னால் பதில் சொல்கிறேன் .
இப்போது எண்ணம் --
என்னைத் தேடி எனக்குள் பயணம் .
பாராட்டு முழக்கங்கள் வழுக்கும் வேளை --
என்னைத் தேடி என்னுள் ஒரு பயணம் ..
ஒவ்வொன்றாய் முகத்திரை ஒதுக்கிப் புகுந்து
மறந்த முக தரிசனம் மன ஆடி தேடுகிறேன் ;
உண்மைச் சிறு சுடர் உள் அறை உயிர்க்கிறேன்--
உண்மை முகம் நாடி ஒப்பனை உரிக்கையில்
காலடி வீழும் வக்கிரச் சருகுகள் கணக்கில கணக்கில !
ஒ !இத்தனை புழுங்கலில் நாற்றமடிக்கிறேன் !
பொய்மை மேவிய புண்கள் இவையோ ?
&&
போற்றும் குரல்களோ போதையாய்ச் செவிகளில் !
அற்புதன் ,அழகன் ,அண்ணன் ,மாவீரன் ,
வள்ளல் ,செம்மல்,இதய தெய்வம் என்பதாய்
மொழியைப் புரட்டிப் பொய்மையில் அமுக்கிச்
சொட்டச் சொட்ட ஊற்றிடும் போதை !
திக்குகள் திணறும் திகட்டும் லக்ஷார்ச்சனைகள் !
&&
தாலாட்டெல்லாம் தட்டி விடுகிறேன் --
இதய இமைகளை இழுத்து விரிக்கிறேன் !
இன்னமும் கூட உள்விழி முன்னே
இத்தனை திரைகளா வரிசை விரிப்பன ?
&&
பொய்யை இரையுண்டு பொய்க்கே இரையாகி --
சேச்சே !ஒரு புத்தன் எழுகிறான் !
திரைகளைக் கிழித்து ஒப்பனை உடைத்து
பொய்மையை அவிழ்த்து
நிர்வாண உண்மையாய் நடந்து வருகிறேன் --
திரைகளின் தீயில் பிழம்பாய் நின்ற நான்
உண்மைச் சாம்பலாய் உயரப் பறக்கிறேன் ;
காற்றின் புனிதம் கலந்து திரிகிறேன் !
&&
உலகே ! புகழ் மரியாதைகள் பொய்கள் பெறுகையில்
உண்மை உயிர்த்திட உளம் அஞ்சிடுதே !
ஏய்ப்பதில் ஒரு சுகம் !ஏமாற்றத்திலும் ஒரு சுகம் என
உன் சுழற்பாதை மாறும் நாள் என்றோ ?
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment